Monday, October 20, 2008

ஹோட்டலில் சென்று சாப்பிடும் மக்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடியில் காகங்களை வேட்டையாடி, காடை பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி போடும் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்த அக்கா தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் சிலர் காகங்களை வேட்டையாடி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியை கண்காணித்தனர்.

இந்நிலையில் தெர்மல் நகர் கடற்கரைக்கு வந்த ஒரு பெண்ணும் வாலிபரும் ஏதையோ காகங்களுக்கு தூவினர். நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் அவற்றை கொத்தித் தின்றன. சிறிது நேரத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தன.

மயங்கிய காகங்களை எடுத்து சாக்கு மூட்டையில் வைத்து கட்டினர். இதை பார்த்த போலீஸார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்த்னர். அவர்கள் இருவரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராதா, அவரது தம்பி முனியாண்டி என்பது தெரியவந்தது.

விசாரணையில், இருவரும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் தங்கி வருகின்றனர். கோழி, காடை, கௌதாரி போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதால் காகங்களை பிடித்து தரும்படி சில ஹோட்டல் உரிமையாளர்கள் இவர்களிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து தெர்மல் நகர் கடற்கரையில் கோழி தீவனத்தில் மரு்நது கலந்து காகங்களை வேட்டையாடியுள்ளனர். பின்னர் தோலை உரித்து இறைச்சியாக்கி தூத்துக்குடி, ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்துள்ளனர்.

ஹோட்டல்களிலும் மசாலா தடவி காடை, கௌதாரி என்று கூறி காக்கா பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹோட்டல்களில் இருந்து இவர்களுக்கு அதிக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களின் உற்வினர்களும் பல இடங்களில் காகங்களை வேட்டையாடி காடை, கௌதாரி என்று கூறி விற்று வருவதாகவும் கூறினர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ரன் என்ற திரைப்படத்தில் விவேக் தனது காமெடியில் காக்கா பிரியாணி பற்றி கூறியபோது வயிறு புடைக்க் சிரித்திருப்போம். ஆனால் அது நிஜம் என்று இப்போது தெரிய வந்துள்ளது.